ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய

Friday 12 October 2018

ஆவுடையார்.......

தென்நாடுடைய  சிவனே போற்றி!!
எந்நாட்டவற்கும் இறைவா போற்றி!!



இத்தலம் தமிழ்நாட்டில் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கிக்கு தென்கிழக்கில் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. புதுக்கோட்டை பட்டுக்கோட்டை, காரைக்குடி, முதலிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு. திருவாசகப் பாடல்கள் அனைத்திலும் திருப்பெருந்துறை என்று கூறப்பட்டிருக்கிறது. தற்பொழுது ஆவுடையார் கோவில் என்றே வழங்கப்படுகிறது. இலக்கியங்களில் ஆதிகயிலாயம், குருந்தவனம், சிவபுரம், பராசந்திபுரம், பூலோக கயிலாயம் எனப் பல பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.




இக்கோவில் ஊரின் நடுவில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி தேரோடும் நான்கு வீதிகள் அழகுற அமைந்துள்ளன. கோவிலுக்குள் மூன்று பிரகாரங்கள் உள்ளன. கோவில் வாசலில் அமைந்துள்ள இராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டு விளங்குகிறது. இத்திருக்கோவில் யோகம் மற்றும் ஞான மார்க்கத்தார் போற்றும் சிறப்புடையது. இங்குள்ள இறைவன் அரூபமாக வைத்து பூசிக்கப்படுகிறார். எனவே இக்கோவில் மற்ற சிவன் கோவில்களின் அமைப்புகள் மற்றும் சிறு தெய்வ வழிபாடுகளிலிருந்து முற்றிலும் 
வேறுபட்டு விளங்குகிறது.

மூலவர் ஆன்மநாதர்




தில்லையில் ஸ்ரீ நடராஜர் ஆனந்த தாண்டவம் நிகழ்த்துவதற்கு முன்பு பதஞ்சலி முனிவர், புலிக்கால் முனிவர், மற்றும் பல முனிவர்கள் இந்த குருந்தவனத்தில் தவமியற்றும் போது, இறைவன் காட்சி தர அவர்கள் பேரானந்தமடைந்து இறைவனிடம் திருநடனக் காட்சியையும் வேண்டிய போது சிதம்பரத்திற்கு வந்து ஆனந்தத் திருநடனக் காட்சியைக் காணுங்கள் என்று அருளினார். அவ்வாரே முனிவர்கள் அனைவரும் தேவர்களுடன் சிதம்பரம் சென்று ஆண்டவனின் ஆனந்த திரு நடனக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர் என்பது புராண வரலாறு ஆகும். முனிவர்களுக்கு காட்சி தந்தவர் இக்கோவிலின் மூலவர் ஆகிய ஆன்மநாதர் ஆவார். ஆத்மாவுக்கு நாதராய் விளங்குவதால் இவர் ஆத்மநாதர் எனப்படுகிறார்.
எல்லாச் சிவாலயங்களிலும் உள்ள சிவலிங்கத் திருமேனி பாணம், சக்தி பீடம், பிரம்ம பீடம் என மூன்று பகுதிகளாக விளங்கும். ஆனால் இங்கு நடுவில் உள்ள சக்தி பீடம் பகுதி மட்டுமே உள்ளது. அதற்க்கு மேலே குவளை ஒன்று சாத்தியிருப்பார்கள். அதாவது சக்தி பீடத்தில் அறிவொளியாக ஆன்மநாதர் விளங்குகிறார். அதாவது உருவம் இல்லாத அருவமாக இறைவன் விளங்குகிறார். சக்தி பிம்பம் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதால் சக்தியே பிரம்மத்தை வெளிப்படுத்துகிறது என்பது தத்துவம் ஆகும். இவருக்கு முன் உள்ள படைகல்லில் புழுங்கலரிசி அன்னத்தை ஆவிபுலப்பட பரப்பி, அதைச் சுற்றி தேன்குழல், அதிரசம், அப்பம், வடை முதலியன வைத்து நிவேதனம் செய்வர். உருவம் இல்லாதவர்க்கு உணவு ஆவியிலுள்ள நறுமணமே உணவாகும்.

அம்பிகை யோகாம்பிகை


அம்பிகை கோவில் கருவறையில் அம்பிகை அரூபமாக விளங்குவதால், உருவத்திருமேனி கிடையாது. ஒரு யோக பீடம் மட்டுமே காணப்படும். அம்பிகை யோகாம்பிகை எனவும் சிவயோக நாயகி எனவும் போற்றப்படுகிறாள்.

மாணிக்கவாசகர்




தற்போது மக்கள், கோவிலுக்கு வழிபடச் செல்லும் போது, நேராக மூலஸ்தானதிற்குச் சென்று மூலவரை வழிபட்டு விட்டு பின்னர் முதல் பிரகாரம், இரண்டாவது பிரகாரம், மூன்றாவது பிராகாரம் என்று சுற்றி வருவது போல, நாமும் மூலவர் ஆத்மநாதரை வழிப்பட்டு விட்டு முதல் பிரகாரம் சுற்றி வந்தால் முதலில் நாம் வழிபடுவது மாணிக்கவாசகரின் உற்சவ மூர்த்தியாகும் . அடுத்து நாம் காண்பது அம்பாள் யோகாம்பிகை கோவிலாகும். அம்பிகையின் பாதங்களை நாம் கருங்கல் பலகணி வழியாகத்தான் தெரிசிக்க வேண்டும்.

குறுந்த மூலம்



அடுத்து மாணிக்கவாசகரின் மூலவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கருவறை, அர்த்த மண்டபம், பிரகாரம், விமானம் என தனிக் கோவில் போன்று அமைந்துள்ளது. அடுத்து தொடர்ந்து சென்றால் , வெயிலுகந்த விநாயகர், அக்னி தீர்த்தம், எண்ணற்ற சிற்ப வேலைப்பாடுகள் உள்ள பெரிய பெரிய தூண்கள் ஆகியவற்றைக் காணலாம். 

அடுத்து உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் தான் விழாக் காலங்களில் மாணிக்க வாசகார் எழுந்தருளி காட்சி கொடுக்கும் உயரமான மேடை அமைந்துள்ளது. அடுத்து தல விருட்சமான குறுந்த மரங்கள் இரண்டு உள்ளன. இவ்விருட்சங்களை வலம் வருவதற்கு ஏற்ப மேடை உள்ளது. அடுத்து வசந்த மண்டபம், பஞ்சாட்சர மண்டபம் ஆகியவற்றில் உள்ள சிற்பங்களைக் கண்டு மகிழலாம்.





ஆத்மநாதரின் கருவறைக்கு நேர் பின்புறத்தில், நாலுகால் மண்டபத்தில், ஆத்மநாதர் யோகாசன மூர்த்தியாயும் அவருக்கு எதிரில் மாணிக்கவாசகர் உபதேசம் பெறுவது போலவும், சிற்பங்கள் உள்ளன. இறைவன் குருந்தமரமாக விளங்குதல் முதல் சிறப்பாகும். பின்னர் வந்த மாணிக்கவாசகர், குருந்தவன முனிவர்கள் சொற்படி சக்தி பிம்பத்தையே அத்மநாதராக பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினார் என்பர்.அடுத்து முதல் பிரகாரத்தில் தொடர்ந்து சென்றால் திருவாசகக் கோவிலையும், நடராஜர் சந்நிதியையும், அதற்கு எதிரில் ஆத்மநாத கூபம் எனப்படும் தீர்த்தக் கிணற்றையும் காணலாம். இதற்கு சிவா தீர்த்தம் என்ற பெயரும் உண்டு.
இக்கோவிலில் விநாயகர் , முருகன் , நடராஜர், மாணிக்கவாசகர் தவிர வேறு பரிவார மூர்த்திகள் கிடையாது. இரண்டாம் பிரகாரத்தில், தில்லை மண்டபம், பக்தி மண்டபம் முதலியான உள்ளன. தில்லை மண்டபமே நடனசபை என்பர். அடுத்து மூன்றாம் பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் பல தெய்வங்களின் சிற்பங்களையும் குதிரை வீரர்களின் சிற்பங்களையும் காணலாம்.

தீர்த்தங்கள்

இத்தலத்தில் பல தீர்த்தங்கள் இருப்பினும் ஆதியில் உண்டான 9 தீர்த்தங்கள் முக்கியமானவை. அவற்றில் சிவா தீர்த்தம், ஆன்மநாத கூபம் எனப்படும் கிணற்றுநீரை ஆண்மநாதர் அபிஷேகதிர்க்கு மட்டும் பயன்படுத்துகின்றனர். அக்னி தீர்த்தம் என்பது ஆலயத்திற்குள் பெரிய குளமாக உள்ளது. இந்த தீர்த்ததைப் பருகினாலும், நீராடினாலும் நினைத்த பயனை அடையலாம். இவை தவிர அறுபத்து நான்கு கோடி தீர்த்தம், வெள்ளாறு, திருத்தொட்டி தீர்த்தம் முதலியன இத்தலத்தில் உள்ளன

திருவிழாக்கள்

ஆனி மாதத்திலும், மார்கழி மாதத்திலும் உற்சவங்கள் நடைபெறுகின்றன. மாணிக்கவாசகர், இறைவனோடு ஒன்று கலந்த ஆனிமகம் உற்சவம் மிக முக்கியமானது. இத்திருவிழக்களில், மாணிக்கவாசகர் தான் இடபம், திருத்தேர் முதலிய வாகனங்களில் பவனி வருகிறார். இவ்விரண்டு விழாக்களிலும் 9ம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது.

பூஜைகள்

மற்ற பெரிய சிவன் கோவில்களில் நடப்பது போன்றே இங்கும் தினசரி ஆறு கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. சுவாமி சந்நிதி, அம்பாள் சந்நிதி , குறுந்த மூலம் மற்றும் மாணிக்கவாசகர் சந்நிதி ஆகியவற்றில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

இக்கோவிலின் தனிச்சிறப்புகள்

1. உருவம் இல்லாது அருவமாக விளங்கும் ஆத்மநாதர் அதே போன்று யோகாம்பிகை அம்மன்.
2. மாணிக்கவாசகர் சிவமாக திருவுருவம் கொண்டு விழாக்களை ஏற்றருளும் பாங்கு இவருக்கே எல்லா உற்சவமும் நடைபெறுகிறது.
3. இக்கோவிலில் கொடிமரம், பலிபீடம், நந்தி, சண்டிகேஸ்வரர் கிடையாது. பரிவாரத் தேவதைகள் சந்நிதிகள் கிடையாது. இங்கு எல்லாமே ஞானமயம். யோக ஞான மார்கத்தார் பெரிதும் விரும்பும் தலம் ஆகும்.
4. இறைவனே குறுந்த மரமாக விளங்கி, இம்மரதினடியில் இறைவனே மனித ரூபம் கொண்டு எழுந்தருளி மாணிக்கவாசகருக்கு ஞான உபதேசம் அருளி, இவ்விடத்தில் ஆலயம் அமைத்துப் பணிபுரிய கட்டளையிட்டது.
5. திருவிழாக்களில் திருச்சின்னம், சங்கு, மணி ஆகியவை மட்டுமே பயன்படுத்தப்படும். பிற வாத்தியங்கள் இங்கு உபயோகிப்பதில்லை.
6. நைவேத்தியம் செய்யும் போது, சுவாமி முன்னாலுள்ள பெரிய படை கல்லில் அன்னத்தைப் பரப்பி பட்சண வகைகளை உடன் வைத்து வில்வ தளங்கள் தூவி படைகல்லிற்கு வெளியில் இருந்து, அன்னப்புகைக்கு தீபாராதனை காட்டுகிறார்கள். உருவமில்லாத இறைவனுக்கு அன்னைத்தின் வாசனையே பிரதானம்.
இவ்வாறு பிற சிவன் கோவில்களிலிருந்து இத்தலம் பெரிதும் மாறுபட்டு விளங்குகிறது.

இத்தலத்திற்கு அருகிலுள்ள வடக்கூர் (வடநகர்)என்ற ஊரில் அமைந்துள்ள கைலாசநாதர் கோவில் முக்கியமானதாகும். திருப்பெருந்துரையில் ஆத்மநாதரை அருவுருவமாக வழிப்பட்ட உருத்திரர்கள், தாங்கள் இறைவனை உருவத்தில் அர்ச்சித்து வழிப்பட விரும்பிய போது பெருமான் இங்கு சிவலிங்கமாக எழுந்தருளினார். அவரே ஆதி கயிலாய நாதர் ஆவார். 

அருவமாக விளங்கும் ஆன்மநாதரையும், அவரே உருத்திரர்களுக்கு உருவமாக காட்சி கொடுத்த வடக்கூர் ஆதி கயிலாயநாதரையும் நாம் வழிப்பட்டு வர, இறைவன் நமக்கு அருள் புரிவாராக என வேண்டுவோம் .

வாழ்க தமிழ்!!!!!!!                   வளர்க பாரதம்!!!!                 வளர்க  சைவநீதி!!!!

Monday 26 February 2018

பிறவிப்பிணி அறுக்கும் பேரூர்

  சிவ                            தென்நாடுடைய சிவனே போற்றி!!!                               சிவ
                                  எந்நாட்டவற்க்கும் இறைவா போற்றி!!!
                                                            பேரூரா பட்டீசா!!!




ஆதிகால சிற்ப வேலைபாடுகள், கல்வெட்டுகளை கொண்டது கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில். இந்த கோயில் முத்தி தலம் என கூறப்படுகிறது. பொதுவாக சிவாலயங்களில் ஆடும் நிலையில் உள்ள நடராஜரை தான் தரிசிக்க முடியும். ஆனால், ஆடி முடியப் போகும் நிலையில் நடராஜர் எப்படி இருப்பார் என்பதை பேரூர் கோயிலில் காணலாம். 


கோயிலில் இறைவன் பட்டீஸ்வர சுவாமி என்றும் இறைவி பச்சைநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். சிவன்கோயில் என்றாலும் இங்குள்ள சிற்பங்களில் வைணவ சிலைகளும் உள்ளன. 





ஆஞ்சநேயர், மாயகிருஷ்ணர் என்று ஆங்காங்கே தூண்களில் கலையுடன் சமய ஒற்றுமையும் சேர்ந்து மிளிர்கிறது. கோயிலுக்குள் நுழையும் போதே புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சிற்ப வேலைபாடுகள் அமைந்துள்ளன. 


பேரூர் நகரில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால், இது கி.மு. காலத்தில் தோன்றிய ஊர் என கருதப்படுகிறது.

கோயிலுக்கான வரலாறு இறைவனிடம் இருந்தே துவங்குகிறது. ஒரு சமயம் பிரம்ம தேவர் படைப்புத் தொழிலில் சோர்வுற்று கண்ணயர்ந்து விட்டாராம். இதை அறிந்த மகாவிஷ்ணு காமதேனுவை அழைத்து “நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவரது அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத்தொழிலை மேற்கொள்வாயாக” என்று கட்டளையிட்டு இருக்கிறார். அதன்படி காமதேனுவும் இமயமலையில் அருந்தவம் இருந்தாராம். ஆனால் சிவபெருமான் அருள் சித்திக்கவில்லை. அப்போது, நாரத முனிவர் தஷிணகைலாசம் பற்றிச்சொல்ல, காமதேனுவும் கன்றுடன் அந்த இடத்தை அடைந்தது. அங்கே ஆதிலிங்க மூர்த்தியாக காஞ்சி நதிக்கரையில் இருந்த சிவபெருமானுக்கு தினமும் பாலாபிஷேகம் 




செய்து தவமிருந்தது. ஒரு நாள் காமதேனுவின் கன்றான பட்டி, அந்த ஆதிலிங்க மூர்த்தியின் மேல் கவிந்திருந்த புற்றை விளையாட்டாய் குலைத்து விட்டது.

கன்றின் குளம்படி சிவபெருமானின் திருமுடியில் அழுத்தமாக பதிந்து விட்டது. பதறிப்போன காமதேனுவின் வருத்தத்தைப் போக்கும் விதமாக, சிவபெருமான் தோன்றினார். “பார்வதி தேவியின் வளை தழும்பை என் மார்பகத்தில் ஏற்றது போல் உன் கன்றின் குளம்படித் தழும்பையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்” என்று ஆறுதல் கூறினார்.  “இது முக்தி தலம் என்பதால், நீ வேண்டும் சிருஷ்டியை இங்கே அருள முடியாது. அதை திருக்கருவூரிலே அருளுகிறேன். இங்கே நீ தொடர்ந்து தவமிருந்து எனது நடன தரிசனத்தை காணலாம். உன் நினைவாக இத்தலம் பட்டிபுரம் காமதேனுபுரம் என்று வழங்கப்படும். எனக்கு பட்டிநாதர் என்ற ஒரு திருப்பெயரும் இவ்வூரில் வழங்கட்டும்” என அருளினார். இந்த புராணத்தை மெய்ப்பிக்கும் வகையில் பட்டீஸ்வரர் திருமுடியில் குளம்படித்தழும்பை இன்றும் காணலாம். 

சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இங்கு திருவாதிரை திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவதால் இத்தலம் ‘மேலைச்சிதம்பரம்’ என அழைக்கப்படுகிறது, ஆனி மாதத்தில் நாற்று நடும் திருவிழா இங்கு விசேஷம். 



பங்குனி உத்திர தேர்த்திருவிழா, ஆடி, தை, புரட்டாசி அமாவாசை, சூரசம்ஹாரம், சிவராத்திரி ஆகியவை முக்கிய விழாக்கள். கோயில் காலை 5.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்து இருக்கும். 




                     பிறவாப்புளி, இறவாப்பனை, புழுக்காத சாணம்

கோயிலின் முன்பு ‘பிறவாப்புளி’ என்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது. இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள். ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கு பிரார்த்தனை செய்துள்ளார். இங்குள்ள பனைமரம் ‘இறவாப்பனை’ எனப்படுகிறது. இங்கு தரிசனம் செய்தால் அழியாப்புகழ் கிடைக்கும் என்று பொருள். நொய்யல் நதிக்கரையில் உள்ள பட்டிவிநாயகரை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பதும், இறந்தவர்களின் எலும்புகளை இந்நதியில் போட்டால் சில நாட்களில் அவை வெண்கற்களாக மாறி விடும் என்பதும் ஐதீகம். இங்கே இறப்பவர்களின் காதில் இறைவன் ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து தன்னடியில் சேர்த்து கொள்வதால், இங்குள்ள மக்களை இறக்கும் தருவாயில், வலது காது மேலே இருக்கும் படியாக வைப்பர் என்பதும், இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது என்பதும் சிறப்பம்சங்கள்.

அனைவரும் வாழ்வில் கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய திருத்தலம்..

வான்முகில் வளாது பெய்கமலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்ககுறைவிலாது உயிர்கள் வாழ்கநான்மறை அறங்கள் ஓங்கநற்றவம் வேள்வி மல்கமேன்மைகொள் சைவநீதிவிளங்குக உலகம் எல்லாம்.

Saturday 1 July 2017

ஆனித்திருமஞ்சனம்.


சிவபெருமானின் 64 மூர்த்தி வடிவங்களில் மிகவும் அற்புதமானது நடராஜர் திருவுருவம் என்று போற்றப்படுகிறது.
இவரது நட்சத்திரம் திருவாதிரை. இது வெப்பமானது. அதற்கேற்ப சிவபெருமானின் கழுத்தில் தங்கிய விஷம், கையில் அக்னி, உடலில் சுடுகாட்டுச் சாம்பல் என உஷ்ணமான திருமேனியனாக இருக்கிறார். அவரைக் குளிர்விப்பதற்காக வருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.
பொதுவாக சிவத்திருத்தலங்களில் அருள்பாலிக்கும் சிவபெருமானுக்கு (லிங்கம்) தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு வருடத்திற்கு ஆறுமுறைதான் அபிஷேகம் நடைபெறும்.
மார்கழி திருவாதிரையில் அருணோதயகாலப் பூஜை; மாசி வளர்பிறை சதுர்த்தியில் சந்திபூஜை; சித்திரை திருவோணத்தில் நண்பகல் பூஜை; ஆனி உத்திரத்தில் சாயரட்சை பூஜை; ஆவணி வளர்பிறை சதுர்த்தி மற்றும் புரட்டாசி வளர்பிறை சதுர்த்திகளில் அர்த்தஜாம பூஜை என ஆறுகால பூஜையை நடராஜப் பெருமானுக்கு தேவர்கள் செய்கிறார்கள் என்பது ஐதீகம். இதன் அடிப்படையிலேயே பூவுலகிலும் செய்யப்படுகிறது.
சிதம்பரத்தில் இந்த ஆறு அபிஷேகச் சிறப்பு நாட்களில் மட்டும் நாம் இறைவனை சிற்றம் பலத்தைவிட்டு வெளியே தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் காலையிலும் மாலையிலும் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்படிக லிங்கத்திற்கும்; காலை நேரத்தில் ரத்ன சபாபதிக்கும்தான் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம் ஆகியவை பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படுகின்றன.
மற்ற நான்கு அபிஷேகங்களும் பிற சிவாலயங்களில் நண்பகலில் நடைபெறும். என்றாலும் திருமூலட்டானம் என்பதால் தில்லையில் மட்டும் பொற்சபையில் மாலை வேளையில் நடைபெறுகிறது.
தில்லையில் ஆனி உத்திரத்தன்று சூரிய உதய வேளையில், யானைகள் இழுக்கும் தேர்போல அமைக்கப்பட்டுள்ள ராஜசபையின் முன்மண்டபத்தில், ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கும் அன்னை சிவகாமசுந்தரிக்கும் வெகுசிறப்பாக ஆனித் திருமஞ்சனம் நடைபெறும். பின்னர், சர்வ அலங்காரத்துடன் ஸ்ரீநடராஜப் பெருமான் ராஜசபையில் அருள்பாலிக்கிறார். இதேபோல் திருவாரூரில் அருள்புரியும் ஸ்ரீதியாகராஜருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
ஆனி மாதத்தில் ஒரே நாளில் சிதம்பரமும் திருவாரூரும் திருவிழாக் கோலம் காணும். அந்நாளில் நடராஜப் பெருமானுக்கும் தியாகராஜப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதனை ஆனித் திருமஞ்சனம் என்று போற்றுவர். இருவரும் அன்று தேரில் பவனி வருவார்கள். திருவீதி உலா முடிந்ததும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள்.
சிதம்பரத்தில் நடராஜர் நின்றாடும் நடனம் ஆனந்தத் தாண்டவம் என்றும்; திருவாரூரில் தியாகராஜர் அமர்ந்தாடும் நடனம் அஜபா நடனம் என்றும் அழைக்கப்படுகிறது. சிதம்பரத்தில் நடராஜருக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உண்டு; திருவாரூரில் தியாகராஜர் திருமேனியே ரகசியம். இதனை சோமகுல ரகசியம் என்பர். இருவர் சந்நிதி யிலும் ஜன்னல் உண்டு. சிதம்பரத்தில் தொண்ணூற்றாறு கண்களுடைய ஜன்னல் வழியாக காற்று வீசிக்கொண்டிருக்கும். தியாகேசருக்கு ஒற்றைச் சாளரம் மூலமாகக் காற்று வீசிக்கொண்டிருக்கும்.
சிதம்பரம் பொற்கோவில்; திருவாருர் பூங்கோவில். சிதம்பரம் ஆகாயத்தலம்; திருவாரூர் ப்ருதிவி (நிலம்) தலம். இந்த இரு பெருமான்களின் நடனத்தையும் பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்கள் தரிசித்திருக்கிறார்கள்.
மார்கழி திருவாதிரைத் திருநாளில் சிதம்பரம் நடராஜர் நடனம் ஆடும்போது அவரது இடது பாதத்தை தரிசித்த அவர்கள், பங்குனி உத்திரத் திருநாளில் திருவாரூர் தியாகேசர் திருநடனமாடியபோது அவரது வலது பாதத்தை தரிசித்தார்கள்.
ஆடல் வல்லானின் திருநடனம் தலத்திற்குத் தலம் மாறுபடும். திருநெல் வேலி தாமிர சபையில் ஆடும் தாண்டவம் படைத்தல் தொழிலைக் காட்டும் காளிகா நடனம். மதுரை மற்றும் திருப்பத்தூரில் ஆடும் தாண்டவம் கவுரிதாண்டவம் மற்றும் சந்தியா தாண்டவம், சங்காரத் தாண்டவம் அழித்தல் தொழிலைக் காட்டும். திருக்குற்றாலத்தில் சித்திரசபையில் இறைவன் புரியும் திரிபுரதாண்டவம் மறைத்தல் தொழிலைக் குறிக்கும். சிதம்பரத்தில் ஆடும் ஆனந்தத் தாண்டவம் ஐந்தொழிலையும் காட்டக்கூடியது. திருவாலங்காடு தலத்தில் காளிபங்க நடனம்; திருமுண்டீச்சரம் தலத்தில் அழகிய தாண்டவம்; திருவாரூரில் அஜபா நடனம்; ஆனந்தத் தாண்டவ புரத்தில் முகமண்டலத் தாண்டவம்; மதுரையில் கால்மாற்றி ஆடிய நடனம்; பேரூர் தலத்தில் ஊர்த்துவ தாண்டவம் என திருநடனங்கள் பல புரிந்திருக்கிறார் சிவபெருமான்.
சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. எட்டாம் நாள் வரை உற்சவமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் தனித்தனியாக வெள்ளி மற்றும் தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்கள். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா நடைபெறும். அன்று பஞ்சமூர்த்திகளும் ஐந்து தேர்களில் எழுந்தருளி உலா வருவார்கள். மேலும் அப்போது மூலவர் ஸ்ரீநடராஜரே தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளி லும் உலா வரும் அதிசயம் இங்கு மட்டுமே நடக்கிறது. அடுத்து நடராஜரையும், அன்னை சிவகாமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து திருமஞ்சன அபிஷேகங் கள் நடைபெறும். அதன்பின் இருவரும் ஆனந்த நடனம் புரிவார்கள். ஆனந்த நடனம் புரிந்தவாறு ஞானாகாச சித்சபையில் எழுந்தருள்வார்கள். தீபாராதனை முடிந்ததும், இரவு அபிஷேகம் முடிந்து கொடியிறக்கப்படும்.
ஆடலரசனான ஸ்ரீநடராஜப் பெருமானைப் போற்றும் ஆனித் திருமஞ்சனத் திருவிழாவில் சுமங்கலிப் பெண்கள் கலந்துகொண்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியத்தைப் பெறுவார்கள். தம்பதிகள் சுகமான வாழ்வு வாழ்வர். கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். ஆடவர்கள் மனதில் தைரியமும் உடல் பலமும் வளமும் கூடும் என்பது ஐதீகம்.
தில்லையிலும் திருவாரூரிலும் மற்றும் சிவத் திருத்தலங்களிலும் ஆனி உத்திர வைபவம் சிறப்பிக்கப்படுவது போல், பழனி ஆண்டவர் கோவிலிலும் ஆனி மாதம் ஜேஷ்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெறும். பழனி ஆண்டவர் எழுந்தருளியுள்ள மலைக் கோவிலில் ஆனித் திருமஞ்சனமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது.
சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமி யன்று அன்னாபிஷேகம் செய்வது போல், அவரது மகனான பழனி முருகனையும் சிவாம்சமாகக் கருதி, ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தன்று மதியம் உற்சவமூர்த்திக்கு அன்னாபிஷேக வைபவம் நடைபெறுகிறது. ஆனிமூல நட்சத்திரத்தன்று திருஆவினன்குடி (பழனி மலையடிவாரம்) குழந்தை வேலாயுதருக்கு மாலை பூஜையில் அன்னாபிஷேகம் உண்டு. ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் ஆனித்திருமஞ்சனம் விசாகத்தன்று நடைபெறும்.
ஆனி மாதத்துக்கு மேலும் பல சிறப்புகள் உள்ளன. ஆனி மாதத்தில் வரும் அமாவாசையும் கிருத்திகையும் திருமஞ்சனத்துக்குரிய சிறப்பு நாட்களாகக் கருதப்படுகின்றன. அன்று பஞ்சபூதத் தலங்களிலும், பஞ்சசபைத் திருத்தலங்களிலும், ஸ்ரீநடராஜர் எழுந்தருளியுள்ள திருத்தலங்களிலும் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
ஆனி மாதப் பௌர்ணமியன்று காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும். இறைவன் திருவீதி உலாவரும்போது, மாடியிலிருந்து கூடை கூடையாக மாங்கனிகளை அபிஷேகிப்பார்கள். இந்த மாம்பழங்கள் தெய்வப் பிரசாதமாகக் கருதப்படுகின்றன.
ஆனி மாத தேய்பிறை ஏகாதசியை அபரா ஏகாதசி என்பர். அன்று திருமாலை, திரிவிக்கிரமராகப் பூஜிக்கவேண்டும். இதனால் பிரம்ம ஹத்தி, பொய் சாட்சி சொன்னது, குரு நிந்தனை செய்தது போன்ற பாவங்கள் அகலும். மேலும் புனித நதிகளில் நீராடிய பலன்களும் கிட்டும். ஆனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி, நிர்ஜலா ஏகாதசி எனப்படும். அன்று விரதம் கடைப்பிடித்து, பெருமாளை வழிபட்டால் எல்லா ஏகாதசிகளிலும் விரதம் கடைப்பிடித்த பலன்கள் கிட்டும். இந்த ஏகாதசியை பீமா ஏகாதசி என்றும் சொல்வர்.
ஆனி மாத மக நட்சத்திரத்தன்று மாணிக்க வாசகர் மோட்சம் அடைந்ததால், சிதம்பரத்தில் இந்நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
ஆனி மாத அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது இரவுகள் ஆஷாட நவராத்திரி எனப்படும். இந்த விழா, வடமாநிலங்களில் சில இடங்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ஸ்ரீசிருங்கேரி மடம் சார்பாக அமைந்துள்ள ஸ்ரீசாரதாம்பாள் கோவில்களில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
கோடைக்கால இறுதி மாதமான ஆனி மாதத்தில் சில கோவில்களில் பழங்களாலான பூஜை சிறப்பிக்கப்படுகிறது. திருச்சி உறையூரில், மேல் கூரையில்லாமல் வெட்ட வெளியில் அமர்ந்திருக்கும் வெக்காளி அம்மன்
திருக்கோவிலில், ஆனி மாதப் பௌர்ணமியன்று மாம்பழங்களைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். பிறகு, அதை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குவார்கள்.
திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவருக்கு (திருக்கோவிலில்) ஆனிப் பௌர்ணமியன்று பக்தர்கள் வாழைப் பழத்தாரினை சமர்ப்பித்து, தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக செழித்துவாழ வேண்டுமென்று பிரார்த்தனை செய்வார்கள்.
ஸ்ரீஆஞ்சனேயர் கோவில்களில் ஆஞ்சனேயருக்கு பழங்களாலான மாலையை அணிவிப்பார்கள். ஆனி உத்திரத்தன்று சிவபெருமானுக்கும் அம்பிகைக்கும் பலவகைப் பழங்களிலிருந்து பிழியப்பட்ட கனி ரசத்தால் அபிஷேகம் செய்வார்கள்.
ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீரங்கநாதருக்கு ஆனி (கேட்டை) ஜேஷ்டாபிஷேகம் மிகவும் போற்றப்படுகிறது. வழக்கம்போல் கோவிலின் வடப்புறம் உள்ள கொள்ளிடம் ஆற்றிலிருந்து திருமஞ்சனத்திற்குத் தீர்த்தம் எடுத்து வருவதற்கு பதில், கோவிலின் தென்புறம் ஓடும் காவிரி நதியிலிருந்து தங்கக்குடங்களில் தீர்த்தம் சேகரித்து யானைமேல் வைத்து, பாசுரங்கள் பாடிய வண்ணம் கொண்டுவந்து பெருமாளுக்கு அபிஷேகிப்பார்கள். பிறகு, அரிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தைலக்காப்பு நடைபெறும். அதற்கு அடுத்த நாள் பெரிய பாவாடை என்னும் வைபவம் நடைபெறும். பலாச்சுளைகள், மாம்பழங்கள், வாழைப்பழங்கள், தேங்காய்த் துருவல், நெய் ஆகியவற்றை பிரசாதமாக பெருமாளுக்கு சமர்ப்பிப் பார்கள். இதனைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமையன்று தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகமும் அதற்கு அடுத்த நாள் பெரிய பாவாடை வைபவமும் நடைபெறும்.
ஆனி மாதம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு நடைபெறும் திருமஞ்சனத்தன்றுதான் வசந்த பஞ்சமி, சமீகௌரி விரதம் ஆகியவையும் கடைப்பிடிக்கப்படுகிறது. கோவைக்கு அருகிலுள்ள மேலைச் சிதம்பரம் என்று போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வரர்- பச்சை நாயகித் திருக் கோவிலில், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இறைவனும் இறைவியும் நாற்று நடும் திருக்கோலத்தில் தரிசனம் தந்த அடிப்படையில், நாற்றுநடவு உற்சவம் ஆனி திருமஞ்சனத்தன்றுதான் நடை பெறுகிறது.
ஆனி மாத இறைவிழாக்களில் கலந்து கொண்டு ஆன்ம நலம் பெறுவோம்


Tuesday 28 February 2017

சைவர் சிவநெறி

 (சைவர்களாக இருந்தால் ஒழுகவேண்டிய நெறிமுறைகள் )
வேதம், சிவாகமம், புராணம், இதிகாசம், திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்களே நமது சைவசமயத்தின் அடிப்படைச் சட்ட நூல்க ளாகும். சிவநெறி கடைப்பிடிப்போர் இந்நூல்களின் வரையறைகளின் படியே நடக்கவேண்டும். நடவாதார் சைவத்திற்குப் புறம்பானவராவர்.
இந்தியப் பேரரசின் அடிப்படைச் சட்டம், அரசியலமைப்பு என்று சொல்லப்பெறும். இந்தியப் பேரரசின் மாநிலங்கள் அனைத்தும் அரசியலமைப்பு என்னும் இந்த அடிப்படைச் சட்டத்தைப் போற்றி மதித்தே நடந்துகொள்ள வேண்டும்.
அதைப்போலவேதான், சைவத்தின் அடிப்படைச் சட்டமாக விளங்குவது, வேதாகம, புராணதிகாச, திருமுறை, சித்தாந்த சாத்திரங்களாகும். ஆகவே இவற்றைப் போற்றியும், மதித்தும் நடந்து கொள்ளவேண்டும் என்பதே விதியாகும்.
அவரவர்களும் மனம் போன போக்கெல்லாம் போய்த் தனிவழி காண்பார்களானால் நாட்டின் ஒழுங்குமுறை கெட்டுச் சிதறிப் போக ஏதுவாகும். இதைச் சைவர்கள் அனைவரும் உணர்ந்து ஒழுங்கு முறையைக் கடைப்பிடித்து நடந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும்.
வேதம், ஆகமம் இரண்டுமே சிவபெருமானிடமிருந்து ஆன்மாக்களை நன்னெறி செலுத்தற் பொருட்டு வந்தவை என்பதையே அறிவிக்கும். இதை "மஹதோ பூதஸ்ய நிஸ்வசிதம்" என உபநிடதம் கூறுகிறது.
வேதம் என்ற சொல், வித் என்ற வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியது. வேதம் என்பதற்கு அறிவுநூல் என்பதே பொருள்.
அறிவுநூலாகிய வேதம், இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு பகுதிகளாக விளங்குகிறது.
வேதங்களின் அங்கமாக உள்ள ஆறு அங்கங்களையும் முறையாகக் கற்றுத் தெளிந்தால்தான், வேதங்கள் நமக்குத் தெளிவா கப்புரியும்.
வேதம் பற்றித் திருமூலர் அருள்வது காண்க.
வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே. (தி.10 பா.96)
ஆகமம்: ஆ என்பது, ஈசுவரனைக் குறிக்கும் ஓரெழுத்தொரு மொழி; கமம் என்பது, வந்தது என்பதைக் குறிக்கும். எனவே ஈசுவர னிடமிருந்து வந்தது என்பதைக் குறிப்பதாகும். ஆகமங்கள் இருபத்தெட்டாகும். வேதம் நான்கும் பரமேசு வரனின் நான்கு முகங்களிலிருந்து தோன்றின என்பர்; ஆகமங்கள் இருபத்தெட்டும் பரமேசுவரனின் உச்சி முகத்தினின்றும் தோன்றின என்றும் திருமூலர் (தி.10 த.3) குறிப்பிடுகிறார்.
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே. (தி.10 பா.102) திருமூலர்
பூரணனாகிய பெருமானிடமிருந்து வந்தமையால் பூரணம் என வழங்கி, பின்னர் அச்சொல்லே புராணம் எனத் திரிந்தது என்றும் கூறுவர். புராபிநவம் - பூரணம் எனக் கொண்டு, புராதனமாயும் புதுமை யாயும் உள்ளது எதுவோ, அதுவே புராணம் என்று ஆயிற்று என்றும் கொள்வர்.
"முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே" (தி.8 ப.7 பா.9) என்னும் மணிவாசகரின் திருவாசகமே இதற்குப் போதிய சான்றாகும். மேலும் பழமையிலிருந்துதான் புதுமை தோன்ற முடியும் என்பதையும் ஊன்றி உணர்வோர் இவ்வுண்மையை உணர்வர்.
வேத சிவாகமங்கள் இறைவனால் அருளிச் செய்யப் பெற்றன போலப் பதினெண் புராணங்களும் அவ்விறைவன் திருவுள்ளப் பாங்கின்படியே தோன்றலாயின என்பதைத் திருஞானசம்பந்தர், திருவையாறு தேவாரத் திருப்பதிகத்தில்,
மதிசூடு மைந்தனும் பங்க மில்பதி னெட்டொடு நான்குக் குணர்வுமாய்
அங்க மாறுஞ்சொன் னானுமை யாறுடை யையனே. (தி.2 ப.6 பா.6)
பன்னிரு திருமுறைகளும் பதினான்கு சித்தாந்த சாத்திரங்களும் வேத, சிவாகம, புராண, இதிகாசக் கருத்துக்களையே தெளிவாகத் தூய இனிய தெய்வத் தமிழில் விளக்கமாகக் குறிப்பிடுகின்றன. பன்னிரு திருமுறைகளும், பதினான்கு சித்தாந்த சாத்திரங்களும், இறையருளால் சமயாசாரியர், சந்தானாசாரியர் உள்ளிட்ட நாயன்மார்கள் வாயிலாகத் தோன்றியவை. இத்திருமுறைகளும் சித்தாந்த சாத்திரங்களும் இல்லையேல் வேதம், சிவாகமம், புராணங்களைப் பற்றிப் பொது மக்களும், புலவர்களும் புரிந்து கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். வேதம், சிவாகமம், புராணங்கள் இல்லையென்றால் பன்னிரு திருமுறைகளும், பதினான்கு சாத்திரங்களும் தோன்றுவ தற்கே வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.
எனவே வேத, சிவாகம, புராண இதிகாசக் கருத்துகளைத்தாம், திருமுறைகளும் சித்தாந்த சாத்திரங்களும் பல கோணங்களினின்று பார்த்து, அவற்றின் செம்பொருளை நமக்குப் பக்குவமாக உணர்த்தி வருகின்றன. இவற்றையெல்லாம் செந்நெறி நிற்க விரும்புவோர் கைக்கொண்டு பயன் பெறுவரே அன்றிக் கைவிடார்.
உதிவிய நூல் :-
குருமகாசந்நிதானம் ஆசியுரையில் இருந்து
பன்னிரண்டாம் திருமுறை - தருமை ஆதீனப் பதிப்பு
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
நம : பார்வதீ பதயே! ஹர ஹர மகா தேவ !!

Tuesday 14 February 2017

சதுரகிரி -பூலோக கைலாயம் -சித்தர்களின் சொர்க்கபுரி

                                                                                    

1.அகத்தியர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே `என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

2.பார்வதி பூஜித்த லிங்கம் : சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும்..இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர்.

3.பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார்.சட்டை நாதர் குகை ஒன்று உள்ளது ...அமைதியான சூழல் மனம் லகிக்கிறது . மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.

4.இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது..அருமையான அனுபவங்களை பெறலாம் செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.

5.சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. .மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.

6.மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது...

7.சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்ததால் .-இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது .

8.மதுரையிலிருந்து மலைக்கு மேலே - சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் ' உள்ளது . இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் - சித்தர்கள், ரிஷிகள் - மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர் ..முதன்முறை செல்பவர்கள் - கூட்டம் அதிகமாக இருக்கும் தினங்களை தவிர்த்து சாதாரன சனி , ஞாயிறு கிழமைகளில் செல்வது உங்களுக்கு நல்லதொரு அனுபவம் கிடைக்கும்.

9.மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் - செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி - கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி - அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது.
அங்கிருந்து தாணிப் பாறைக்கு - மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்....

10.வயதான பெரியோர்கள் பலர் சிவநாமம் ஜெபித்தபடி பக்தி பரவசத்தோடு கையில் கோலின்றி வருவது மெய் சிலிர்க்க செய்கிறது .. எனது கையில் உள்ள குச்சி ...நான் இரவில் நடந்து செல்லும் போது ஒரு நல்ல வழிகாட்டியாய் ,பக்கபலமாய்,பாதுகாப்பு கருவியாய்,உற்றுழி உதவும் நண்பனை போல் இருந்தது ..என்னால் அந்த குச்சியை விட்டுவர மனமில்லாமல் நன்றி உணர்வோடு அடிவாரத்தில் உள்ள விநாயகர் சன்னதியில் வைத்து வணங்கி வந்தேன்...அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது செல்லவேண்டிய அற்புதத் திருத்தலம்